சினிமா துறைக்கு நிவாரணம் வழங்காத மத்திய அரசு - வருத்தம் அளிப்பதாக பெப்சி அமைப்பு அறிக்கை...
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வைரஸ் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் பரவி வருகிறது. இதனால் ஜூன் 19 முதல் 4 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன. அதோடு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இருக்கு மக்களுக்கு அரசு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் மாநில அரசு இதுவரை எவ்வித நிதி உதவியும் அளிக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”கொரோனா வைரஸ் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அளவுக்கு அதிகமாகவும் ,வேகமாகவும் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை 12 நாட்களுக்கு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஜூன் 19 முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளில் post-production, pre-production என அனைத்து பணிகளையும் நிறுத்தி வைக்க முடிவு எடுத்துள்ளது.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு முழு வேகத்துடன் செயல்பட்டு வந்தாலும் பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே அதனை கட்டுப்படுத்த இயலும். அதனால் தயவு செய்து தமிழக மக்கள் இந்த நோய் தொற்றை தடுக்க தமிழக அரசுக்கு ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூன்றாவது முறையாக ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி அளித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் உயர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, எங்கள் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதுபோன்றே அமைப்பு சாராத் தொழிலாளர்களின் நிலை உணர்ந்து திரைப்பட தொழிலாளர்களையும் அவர்களோடு இணைத்து, கருணையோடு மூன்றாவது முறை நிவாரணம் அளித்து எங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மத்திய அரசுக்கு திரைப்படத் துறை மற்றும் திரைப்பட தொழிலாளர்களுக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் நிவாரணம் வழங்குமாறு மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும், மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களுக்கும் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திருமுருகன் அவர்களுக்கும் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளோம்.
அது போன்றே பாதிப்பிலிருந்து தொழில்துறைகள் மீண்டும் மீண்டெழ 20 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு நிவாரணமாக அறிவித்துள்ளது. அந்த இருபது லட்சம் கோடி ரூபாயில் எந்த நிதியும் இந்திய திரைப்படத் துறைக்கும், இந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கும் அறிவிக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிட விரும்புகிறோம். மாநில அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மூன்று முறை நிவாரணம் அளித்துள்ள நிலையில், மத்திய அரசு எவ்வித நிவாரணமும் அளிக்காதது வருத்தத்தை அளிக்கிறது. தயவு செய்து எங்கள் திரைப்படத்துறைக்கு நிவாரணம் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments