தனியார் மயமாக்கப்படும் இரயில்வே துறை -இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு
உலகமே கொரோனா பயத்தில் முடங்கி கிடக்கும் காலக்கட்டத்தில் மத்தியில் ஆளும் மோடி அரசு சத்தமில்லாமல் இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை வேகப்படுத்தி உள்ளது.
பாதுகாப்புத்துறை, ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கியதை போல், இரயில்வே துறையையும் தனியாருக்கு தாரை வார்த்துள்ளது. இதனை கண்டித்து இடதுசாரி தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பிரதமர் மோடி முதல் முறையாக ஆட்சிக்கு வந்தபோதே ரயில்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக அத்திட்டம் தள்ளிப் போனது. தற்போது இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றதும், ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. ஆனால் ஒருபுறம் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படாது என உறுதி அளித்திருந்தார்.
ஆனால்முதல் கட்டமாக குறிப்பிட்ட ரயில்களை மட்டும் தனியார் மயமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன்படி, ஆமதாபாத் - மும்பை சென்ட்ரல் - தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் டில்லி - லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சோதனை அடிப்படையில் தனியார் மூலம் இயக்கப்பட உள்ளன. இதற்கு மத்திய அரசு சொல்லும் காரணம் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை கொடுக்க வேண்டும் என்பதே.
இந்த இரு வழித்தட்டங்களில் இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள், ரயில்வேயின் துணை அமைப்பான, ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம் ஒப்படைக்கப்படும் எனவும் இந்த ரயில்களில், எவ்வித கட்டண சலுகையோ, ரயில்வே ஊழியர்களுக்கான சலுகையோ கிடையாது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த ரயில்களின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கப்படும். சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு இணையாக, இந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேம்படுத்தப்படும். இதைத் தவிர கூடுதல் வசதிகளையும், ஐ.ஆர்.சி.டி.சி., மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணியர் கட்டணத்தையும், ஐ.ஆர்.சி.டி.சி., நிர்ணயித்து கொள்ளலாம். அதே நேரத்தில், ரயில்வேயின் இன்ஜின்கள், டிரைவர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ரயில்கள் தனியார் மூலம் இயக்கப்படுவதால், அந்த நிறுவனங்களின் பெயர்களில் இயக்க அனுமதிக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது..
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் சூழலில், ஆவடி ரயில் நிலைய அருகே சிஐடியு தொழிற்சங்கத்தினர் சுமார் 50 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
No comments