கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்.... மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை....
கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.. மக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய, பிரபலங்களே வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் சமீபத்தில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்..
இதுகுறித்து கடந்த வாரம் முகநூலில் வீடியோ வெளியிட்டிருந்த அவர், லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறேன் என்றும், தான் நலமாக இருப்பதாகவும் கூறியிருந்தார்..
இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நேற்று கூட அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது, அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.. ”கடந்த 5 ஆம் தேதி முதல் எஸ்.பி.பி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ”நேற்று இரவு திடீர் என்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின்படி அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. மேலும், சிறப்பு மருத்துவக்குழுவால் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவகிறது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments