14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை....
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்துள்ள கோவிலான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (22). இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் 2019-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி புகார் அளித்தனர். புகாரின் பேரில் அரவிந்த் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பளித்தார். அதன்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அரவிந்த்க்கு 32 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பிற்கு பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு காவல்துறையினர் கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும், என்ற கோரிக்கையையும் பெற்றோர் முன் வைத்தனர்.
No comments