சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், தங்கம் விலை அதிரடி ஏற்றங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தங்கத்தின் மவுசு கூடியிருப்பதால், அதன் விலையோ ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. ஏழை, எளிய மக்களை தாண்டி நடுத்தர வர்க்கத்தினருக்கும் தங்கம் எட்டாக்கனியாகிவிடும் சூழல் நிலவுவதாக மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1 அன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.57,200க்கு விற்பனையானது. அதன்பின்னர் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை , நேற்றைய தினம் (மார்ச் 20) பவுனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு பவுன் ரூ.66,480க்கு விற்பனையானது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.8,310க்கு விற்பனை செய்யப்பட்டது. 3 மாத இடைவெளியில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்திருப்பதும் நகைப்பிரியர்களை கலக்கமடையச் செய்துள்ளது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று 22 ஆபரணத்தங்கம் சவரன் ரூ.66,160க்கும், கிராம் ரூ.8,270க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.800 அதிகரித்த நிலையில், இன்றைய தினம் சற்று விலை குறைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக நகைப்பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.