பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி நாம் மனோகர் நாராயண் மிஸ்ரா, பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியின் கீழ் வராது என கருத்து தெரிவித்துள்ளார். அதாவது அவர் தனது தீர்ப்பில், “சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்துவதும், அவரது பைஜாமா ஆடையின் கயிற்றை அவிழ்த்து அவரை இழுப்பது போன்ற செயல்கள் பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது” என்று தெரிவித்தார்.
மேலும், பெண்ணின் ஆடைகளை இழுத்து தாக்குதல் அல்லது நிர்வாணமாக்கும் நோக்கத்துடன் தாக்குதல் என்கிற வரம்பிற்குள் வருவதாகக்கூறி, குற்றம் சாட்டப்பட்டவரின் மேல் பதியப்பட்ட வழக்குகளின் பிரிவுகளை மாற்றியும் உத்தரவுகளை பிறப்பித்தார். உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெண் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களை உறுப்பினரான ஸ்வாதி மாலிவால், இது மிகவும் வெட்கக்கேடான செயல் என்ப விமர்சித்துள்ளார். இந்த தீர்ப்பு முற்றிலும் தவறாது என்றும், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி இந்த சமுதாயத்திற்கு என்ன செய்தியை கொடுக்க விரும்புகிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு சிறுமி இதுபோன்று கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகியும், அது பாலியல் வன்கொடுமையாக கருதப்படாது எனில், பாலியல் வன்கொடுமைக்கு இவர்கள் வைத்திருக்கும் அளவு என்ன? இந்த விவகாரத்தில் உடனடியாக உச்சநீதிமன்றம் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்வாதி மாலிவால் வலியுறுத்தியுள்ளார்.