தென்காசி மாவட்டத்தில் கடந்த ஏப்-30 ஆம் தேதி பெய்த கனமழையால் கடையநல்லூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது., மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 37-தென்காசி (தனி) மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. தென்காசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடையநல்லூர் வட்டம், கொடிக்குறிச்சி கிராமம், யு.எஸ்.பி. கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் மத்திய ஆயுத காவல் படை உள்ளடக்கிய மூன்றடுக்குப் பாதுகாப்புடன் கூடிய முத்திரையிடப்பட்ட பாதுகாப்பு அறையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள யு.எஸ்.பி. கல்லூரி வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 30ம் தேதி பிற்பகல் 3.45 மணியளவில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள யு.எஸ்.பி. கல்லூரி பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளைச் சுற்றிலும் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தின் வளாகத்திலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் செயலிழந்துள்ளது.
உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளைச் சுற்றிலும் செயலிழந்த கேமிராக்கள் சரி செய்யப்பட்டு மாலை 6.30 மணியளவில் கேமிராக்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. எனக் குறிப்பிட்டுள்ளார்.