சின்னசேலம் அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் – சேலம் – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெத்தாசமுத்திரம் கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் ஆத்திரமடைந்த பெண்கள் சேலம் – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காலி குடங்களுடன் பெண்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்ட பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.