நாகையில் கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்ததால் கோமாவுக்கு சென்ற 10 வயது சிறுவன்; சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றிய, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்;
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த மோகனூரை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் திவாகர் (வயது 10). கடந்த மே 18- ந்தேதி தனது பெற்றோருடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஒன்று திவாகரின் கையில் கடித்தது.
இதையடுத்து வலியில் அலறி துடித்த திவாகரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பாம்பின் விஷம் ஏறியதால் திவாகரின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழந்தன.
தொடர்ந்து ஆஸ்பத்திரியில் குழந்தை மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் வென்டிலேட்டர் உதவியுடன் திவாகருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
லாக் இன் சின்ட் ரோம் (Lock In Sint Rom) என்ற ஒரு அரிய நரம்பியல் நோயால் பாதிப்புக்குள்ளான சிறுவன் திவாகர் கோமா நிலைக்கு சென்றான். தொடர்ந்து 7 நாள் சிகிச்சைக்கு பிறகு திவாகர் உடல் நலம் தேறியது.
இதையடுத்து இன்று பூரண குணமடைந்த திவாகர் வீடு திரும்பினான். கொடிய விஷத்தினால் கோமாவுக்கு சென்ற 10 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு சிறுவனை பெற்றோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.