அம்பத்தூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர், நண்பருடன் கைது. 1140 போதை மாத்திரைகள், ரூ . 20000 பணம், ஆட்டோ, பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவின் பெயரில், அம்பத்தூர் சரக உதவி ஆணையர் கிரி மேற்பார்வையில், அம்பத்தூர் சட்டம், ஒழுங்கு காவல் ஆய்வாளர் டெல்லி பாபு தலைமையில் போலீசார் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அம்பத்தூர் மார்க்கெட் அருகே போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் டில்லி பாபு தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணிபுரியும் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (23) என்ற வாலிபர் அம்பத்தூர் மார்க்கெட் பகுதியில் தனது ஆட்டோவில் வைத்து போதை மாத்திரை விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
அவரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரனையில் அவருடைய நண்பனான சத்யா நகரை சேர்ந்த ரஞ்சித் (23) என்ற வாலிபரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்பு இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து நைட்ரோ விட் என்றழைக்கக்கூடிய போதை மாத்திரைகளை வாங்கி வந்து அம்பத்தூர் மார்க்கெட் பகுதியில் வட மாநில வாலிபர்களுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 76 ஆயிரம் மதிப்புள்ள 76 அட்டைகளில் இருந்த 1140 போதை மாத்திரைகளையும், ரூ.20,000 ரொக்க பணம், ஆட்டோ, இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
போதை பொருள் விற்பனை செய்த குற்றத்திற்காக அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளி இருவரையும் அம்பத்தூர் காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.