டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 157 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 46 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 47வது லீக் போட்டி நடைபெறுகிறது. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 47வது போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி பந்துவீசியது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 13 ரன்களிலும் ஜாக் பிராஸர் மெகர்க் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அபிஷேக் போரெல் 18 ரன்னிலும் சாய் ஹொப் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 153 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சு தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பில் சால்ட் 68 ரன்னிலும் சுனில் நரேன் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் 11 ரன்களில் கேட்ச் ஆனார். கடைசியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் 33 ரன்கள் மற்றும் வெங்கடேஷ் அய்யர் 26 ரன்கள் என நிதானமாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர். இறுதியில் அணியானது 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 157 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் ஆட்டநாயகன் விருது வருண் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டது.