ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 165 ரன்கள் எடுத்தது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 56 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 57வது லீக் போட்டி நடைபெற்றது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 57வது லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஐதராபாத் அணி பந்துவீசியது. லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் 29 ரன்களிலும் குயிண்டன் டிகாக் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 3 ரன்களிலும் குருணால் பாண்ட்யா 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அதிரடியாக விளையாடிய ஆயுஷ் பதோனி 50 ரன்களிலும் நிகோலஸ் பூரன் 48 ரன்களும் எடுத்து அணியை ஒரளவு நல்ல இலக்கிற்கு கொண்டு சேர்த்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் 4 விக்கெட்டுகள் இழந்து 165 ரன்கள் எடுத்தது. பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி இரண்டாவது பேட்டிங் விளையாடவுள்ளது.