மனைவியை அடித்து கொலை செய்து அருகில் உள்ள புதரில் வீசி விட்டு அனைவருடன் சேர்ந்து மனையை தேடிய கணவன். ஒன்றும் தெரியாத அப்பாவி போல நாடகமாடிய கணவன் சிக்கியதின் பின்னணி என்ன.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த போந்தவாக்கம் வில்லியர் காலனியை சேர்ந்த பழங்குடியின கூலி தொழிலாளி சீனு (48), இவரது மனைவி வெங்கடம்மாள் (36). இவர்களுக்கு 3 ஆண் பிள்ளைகளும், 1 பெண் பிள்ளையும் உள்ளனர். இவரது மூத்த மகன் திருமணமாகி பக்கத்துக்கு தெருவில் வசிக்கும் நிலையில் மகளும், தமது மூத்த அண்ணனுடன் வசித்து வருகிறார். மற்ற 2 மகன்களும் அவ்வப்போது உறவினர்கள் வீடுகளில் தங்கி விடுவதுண்டு.
கடந்த 7 ஆம் தேதி இரவு சீனுவும், வெங்கட்டம்மாளும் மட்டுமே வீட்டில் உறங்கிய நிலையில் மறுநாள் காலை இளைய மகன் வீட்டிற்கு வந்த போது வெங்கட்டம்மாள் வீட்டில் இல்லாமல் போகவே அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். சீனுவும் தமது மனைவியை காணவில்லை என கூறி தேடி வந்துள்ளார். 8 ஆம் தேதி நண்பகல் வீட்டின் அருகே முந்திரி தோப்பில் முட்புதரில் தலை மற்றும் உடலில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வெங்கடம்மாள் சடலமாக கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து பாதிரிவேடு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாதிரிவேடு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வெங்கட்டம்மாளின் மூத்த மகன் அங்கையா பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தமது தாயும், தந்தையும் மட்டுமே இரவு ஒன்றாக இருந்ததாகவும், இரவு இருவரும் சண்டை போட்டு கொண்டதாகவும், எனவே தாயின் இறப்பில் தந்தை மீது சந்தேகம் இருப்பதால் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் பேரில் பாதிரிவேடு போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் சீனுவை பாதிரிவேடு காவல் நிலையம் அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சீனுவும் அவரது மனைவி இருவரும் அங்குள்ள மாந்தோப்பில் பணிபுரிந்து வந்துள்ளனர். கணவன், மனைவி இருவரும் ஒன்றாக மது அருந்துவதும், அதற்கு பிறகு இருவருக்கும் சண்டை ஏற்படுவது வாடிக்கையாக இருந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் வெங்கட்டம்மாள், வீட்டு செலவிற்காக தங்களது மாந்தோப்பு முதலாளியிடம் ரூபாய் 2000 முன்பணம் கேட்டுள்ளார். சீனுவிடம் கொடுத்து அனுப்புவதாக முதலாளி கூறியதாக தெரிகிறது. 7 ஆம் தேதி இரவு சீனு மது வாங்கி வந்தபோது வழக்கம் போல கணவன், மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது வீட்டு செலவிற்கு முன்பணம் வாங்கி வரவில்லையா என வெங்கட்டம்மாள் கேட்ட போது கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வீட்டு செலவிற்கு முன்பணம் வாங்காமல் தமக்கு மட்டும் 500 ரூபாய் மட்டுமே வாங்கி கொண்டு அதில் மது வாங்கி வந்ததாக சீனு கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த வெங்கட்டம்மாள் வீட்டு செலவிற்கு என்ன செய்வது என மீண்டும் சண்டையிட்ட போது ஆத்திரமடைந்த சீனு அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து வெங்கட்டம்மாளை தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய வெங்கட்டம்மாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து வெங்கட்டம்மாள் சடலத்தை அருகில் உள்ள முட்புதரில் வீசி விட்டு ஒன்றும் தெரிய அப்பாவி போல வீட்டிற்கு திரும்பி வந்த சீனு அனைவரிடமும் தமது மனைவியை காணவில்லை என கூறியுள்ளார். பக்கத்துக்கு தெருவில் வசிக்கும் தமது மூத்த மகன் வீட்டிற்கும் சென்று வெங்கட்டம்மாளை காணவில்லை என கூறி அனைவருடன் சேர்ந்து மனைவியை தேடுவது போல பாசாங்கு காட்டியது விசாரணையில் அம்பலமானது.
இதனையடுத்து சந்தேக மரணம் பிரிவு வழக்கினை கொலை வழக்காக மாற்றிய பாதிரிவேடு காவல்துறையினர் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் சீனுவை நேற்று இரவு கைது செய்து கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு புதரில் வீசி, வீடு திரும்பி அப்பாவி போல நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.